Sunday 21 April 2013

பிரதோஷ வழிபாடு

சர்வமங்களம் தரும் பிரதோஷ வழிபாடு


இறைவழிபாடு குறைகளை களைந்து நிறைவினை தரும். முக்கியமாக, புண்ணிய நாட்களில் இறைவனை வழிபாடு செய்வது நிறைந்த பயனைத் தரும். காலத்துக்கு அதிக வலிமையுண்டு. காலத்தில் செய்வதற்கு அதிக பயன் கிட்டும். இறைவனை எப்பொழுதும் வழிபட வேண்டும். ஆனால் புண்ணிய தினங்களில் வழிபட்டால், ஒன்றுக்கு கோடி மடங்கு மிகுதியான உயர்ந்த பயன் விளையும். இந்நாட்களில் அன்புடன் இறைவழிபாடு புரிபவர்கள் பாவங்களிலிருந்து நீங்கி புண்ணியம் பெற்று, இகம், பரம், வீடு என்ற மும்மை நலன்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள்.

பிரதோஷம் எப்படி ஏற்பட்டது?

நீண்ட காலத்திற்கு முன் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் பெரும் போர் மூண்டது. இருபுறத்திலும் ஏராளமான பேர் மடிந்தனர். எனவே தேவர்கள், பிரமனை அடைந்து சாகாமல் இருக்க என்ன வழி என ஆராய்ந்தனர்.

அவர், தேவர்களை நாராயணனிடம் அழைத்துச் சென்று முறையிட அமிர்தம் உண்டால் சாகாமலிருக்கலாம் என்று அவரும் யோசனை தெரிவித்தார்.

பாற்கடலைக் கடைந்தால்தான் அமிர்தம் எடுக்க முடியும், அசுரர்கள் தயவில்லாமல் பாற்கடலை கடைய முடியாது. அவர்களை சேர்த்துக் கொண்டால், அசுரர்களுக்கும் பங்குதர வேண்டும். வேறு வழியில்லாததால், தேவர்கள் அசுரர்களையும் துணைக்கழைத்துக் கொண்டனர்.

தந்திரசாலியான, விஷ்ணுவின் ஏற்பாட்டின்படி, அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தனர். மேரு மலையை மத்தாகவும், ஆயிரம் நாக்குடைய வாசுகியைக் கயிறாகவும் கொண்டு, வால்பக்கம் தேவர்களும் தலைப்புறத்தை அசுரர்களும் பிடித்துக் கடைய ஆரம்பித்தனர்.

இவ்வாறு ஆயிரம் ஆண்டுகள் கடைந்தனர். இரண்டு பக்கத்தினரும் மாறி மாறி இழுத்ததால் வாசுகியின் உடல் புண்ணானது. அவன் தன்னையும், அறியாமல் வலி பொறுக்காமல், ஆயிரம் வாயினாலும் விஷத்தைக் கக்கிவிட்டான். அச்சமயத்தில், கடலில் இருந்து விஷம் பொங்கியது. இப்படி பாம்பினால் கக்கப்பட்ட 'காளம்' என்று நீல விஷமும், பாற்கடலில் பிறந்த 'ஆலம்' என்கிற கருப்பு விஷமும் சேர்ந்து கருப்புப் புயல் போல் கொடிய வெப்பமும். கடும் புகையும் கொண்டதாக மாறி உலகை வருத்தத் தொடங்கியது.

தலைப்பக்கம் நின்ற பல நூற்றுக்கணக்கான அசுரர்கள் எரிந்து சாம்பலாக தேவர்கள் தறி கெட்டு, இடமும் வலமும் ஆக ஓடி ஒளிந்தனர். எல்லோரும் பயந்து போய், ஈசனிடம் முறையிட கயிலங்கிரி சென்றனர்.

நந்தியம் பெருமானிடம் அனுமதி பெற்று உள்ளே சென்று சிவபெருமானிடம் அழுது, தொழுது முறையிட்டனர். அப்பொழுது ஈசன் தன் நிழலில் இருந்து தோன்றியவரும், பேரழகரும் ஆகிய 'சுந்தரர்' என்னும் அணுக்கத் தொண்டரை அனுப்பி "அவ் விஷத்தை இவ்விடம் கொண்டுவா!" என்று பணிந்தார்.

சிவபெருமான் கட்டளைப்படி சுந்தரரும், கொடிய ஆலகால விஷத்தை ஒரு துளியாக கொண்டு வந்தார்.

எல்லோரும் அதிசயயிக்க, சிவபெருமான் ஒரு கண நேரம் 'விஷாபகரணமூர்த்தி' என்னும் ரௌத்ர வடிவம் தாங்கி அவ்விஷத்தை உண்டருளினார். அப்போது தேவியார் அவ்விஷத்தை ஈசன் உண்டால் சகல புவனமும் அழியுமே என்று கருதி அவருடைய கழுத்தில் தங்கும்படி செய்தாள். 'கண்டத்தில்' விஷத்தை நிறுத்தியதால் 'நீலகண்டர' ஆனார். விஷம் கொண்டுவந்த 'சுந்தரர்' 'ஆலால சுந்தரர்' என்று அழைக்கப்பட்டார்.

கயிலையில் ஈசன் விஷம் உண்டபிறகு சிறிது நேரம் மௌனமாக இருந்தார். அனைவரும் அவரை போற்றித் துதி பாடியவாறு இருந்தனார்.

ஏகாதசியன்று விஷம் உண்ட பெருமான் துவாதசி முழுவதும் பள்ளி கொண்ட நிலையில் இருந்தார். பின்னர் திரயோதசி நாளில் பகலும் இரவும் சந்திக்கும் மாலை வேளையில் எழுந்து, உமையவனை ஒரு பக்கம் கொண்டு சூலத்தை சுழற்றி மருகத்தை ஒலித்து 'சந்தியா நிருத்தம்' எனும் நடனம் ஆடினார்.

இந்நாட்டியத்தை கண்ட தேவர்கள் மகிழ்ந்தனர். நந்தி சுத்த மத்தளம் வாசிக்க அனைவரும் 'ஹரஹர' என்று துதித்தனர்.

அன்று முதல் பெருமான் ஒவ்வொரு நாளும் அந்தி வேளையில் இக்கூத்தை நிகழ்தி வருகிறார். இவ் கூத்தில், சரஸ்வதி வீணையையும், பிரமன் தாளத்தையும், விஷ்ணு புல்லாங்குழலையும் பூதங்கணங்கள் எண்ணற்ற இசைக்கருவிகளையும் இசைக்கின்றனர் என்பர்.

பிரதோஷ விரதம் அனுஷ்டிக்கும் முறை
பிரதோஷம் என்னும் இவ்விரதம் சிவமூர்த்திக்கு உரிய விரதங்களால் தலையாயது. விரதம் ஏற்பவர்கள், வளரபிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களாலும் வரும் திரயோதசி திதியில் அதிகாலையில் எழுந்து நீராடி நித்திய கடன்களை முடிக்க வேண்டும். பிறகு சிவபுராணம், சிவ நாமாவளாகளை படித்து, முடிந்தவர்கள் மௌன விரதம் இருந்து, மாலையில் கோயில் சென்று, சிவதரிசனம் செய்து, நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய்தீபம் ஏற்றி வணங்கி வருதல் வேண்டும். பிரதோஷ விரதம் முடிந்ததும், வேதம் ஓதும் அந்தணர்களுக்கு தானம் வழங்கி விரதத்தை பூர்த்தி செய்தல் நலம்.

நலம் தரும் நந்திகேஸ்வரர்
சிவபெருமானுக்கு ருத்ரன் என்றொரு பெயரும் உண்டு. ருத் - என்றால் துக்கம். ரன் - என்றால் ஓட்டுபவன். ருத்ரன் - என்றால் துக்கத்தை விரட்டுபவன் என்று பொருள்.

பிரதோஷகாலத்தில் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை போட்டு நெய் விளக்கு ஏற்றி பச்சரிசி வெல்லம் கலந்து வைத்து பூஜை செய்கிறார்கள்.

எனவே, பிரதோஷ தினத்தன்று மறவாமல் நந்திகேஸ்வர வழிபாடு செய்ய வேண்டும்.

சோம சூக்தப் பிரதட்சணம்

மற்ற நாட்களால் ஆலயத்தில் மூன்று முறை வலம் வரும் வழக்கத்திற்கு மாறாக சோம சூக்கப் பிரதட்சணம் செய்ய வேண்டும்.

ஆலகால விஷம் தேவர்களை முன்னும் பின்னும், வலமும் இடமுமாகத் துரத்தியது. தேவர்கள் அஞ்சி நடுங்கி ஒடுங்கி கயிலை மலைக்கு ஓடினார்கள். இறைவனை வலமாக வந்து உள்ளே சென்று பரமனைச் சரணடையலாம் என்று எண்ணிய அவர்களை ஆலகால விஷம் அப்பிரதட்சணமாகச் சென்று எதிர்த்தது. இதைக்கண்டு அஞ்சிய தேவர்கள் வந்த வழியே திரும்பினர். ஆலகால விஷம் அந்த பக்கதிலும் எதிர்த்துச் சென்று பயமுருத்தியது. இவ்வாறு தேவர்கள் வலமும் இடமுமாய் வந்த அந்த நிகழ்சிதான் சோமசூக்தப் பிரதட்சணம் எனப் பெயர் பெற்றது.

பிரதட்சண முறை

முதலில் சிவலிங்கத்தையும் தேவரையும் வணங்கிகொண்டு, அப்பிரதட்சணமாகச் சண்டேசுவரர் சந்நிதி வரை சென்று அவரை வணங்கி கொண்டு, அப்படியே திரும்பி வந்து முன்போல சிவலிங்கத்தையும் ரிஷப தேவரையும் வணங்கிக் கொண்டு வழக்கம்போல் பிரதட்சணமாக ஆலயத்தை வலம் வரும்போது சுவாமி அபிஷேகத் தீர்த்தம் விழும் நிர்மால்யத் தொட்டியைக் கடக்காமல் அப்படியே வந்த வழியே திரும்பி அப்பிரதட்சணமாக சந்நிதிக்கு வந்து சிவலிங்கத்தையும் ரிஷபதேவரையும் வணங்க வேண்டும். இfவ்வாறு மூன்று முறை செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் அனேக அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என நூல்கள் கூறுகின்றன.

இவ்வாறு ஆலயத்தில் பிரதோஷ வழிபாட்டை முடித்தபின் வீட்டிற்குச் சென்று உணவருந்தல் வேண்டும். சனிக்கிழமை வரும் பிரதோஷம் மிகவும் விசேஷமானது.

பிரதோஷ வழிபாடு செய்ய மாலயனாதி வானவர்களும் சிவாலயம் செல்வார்கள். ஆதலால் பிரதோஷ நேரத்தில் திருமால் கோயில்களால் வழிபாடு செய்வதில்லை. ஒவ்வொரு நாளும் மாலை நாலரை, முதல் ஆறுவரை பிரதோஷ நேரமாகும். இது தினப் பிரதோஷம் எனப்படும்.

சிவனை வழிபட ஏற்ற காலம் சாயரஷை. அதிலும் சிறந்தது சோமவாரம். அதனினும் சிறந்தது மாத சிவாரத்திரி. அதனினும் சிறந்தது பிரதோஷம். பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள். தரித்திரம் ஒழியவும், நோய் தீரவும், கெட்ட நோய்களின் துயர் மடியவும் பிரதோஷ வழிபாடு சிறந்ததாகும்.

பிரதோஷ பூஜையின் போது அபிஷேகப் பொருட்களால் விளையும் பலன்கள்:-

1. பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.

2. தயிர் - பல வளமும் உண்டாகும்

3. தேன் - இனிய சாரீரம் கிட்டும்

4. பழங்கள் - விளைச்சல் பெருகும்

5. பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்

6. நெய் - முக்தி பேறு கிட்டும்

7. இளநீர் - நல்ல மக்கட் பேறு கிட்டும்

8. சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்

9. எண்ணெய் - சுகவாழ்வு

10. சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்

11. மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும்

இத்தனை சிறப்பு வயிந்த பிரதோஷ வழிபாட்டை நம் ஊரில் அமைத்துள்ள அருள்மிகு இருதயாலீஸ்வரர் திருக்கோவிலுக்கு சென்று சுவாமின் அருள் பெற்று பிரதோஷ வழிபாட்டையும் சிறப்பித்து வரலாமே ....

No comments:

Post a Comment